வியாழன், 27 ஆகஸ்ட், 2015

யாகாவாராயினும் நாகாக்க!

வரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள். அவசரமென்று உதவி கேட்கும்போது அலட்சியத்துடன் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக வந்துபோகிறார்கள். ‘ஏதாவது உதவி தேவையா?’ என்ற பாவனையில் விசாரித்துச் செல்கிறார்கள்.

அவர்களது செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அரைகுறையாகவாவது அவதானிக்க முடிகிறது. வியப்பாக இருக்கிறது. அவர்களைப்பற்றி அவள் தனக்குள் போட்டுத் தீர்மானித்த முடிவுகள் யாவும் அங்கே தடுமாறி, அவர்களின் புதிய முகங்களைத் தரிசிக்க நேரும் விந்தைகள் யாவும் புதியனவாக இருக்கிறது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

அகத்தில் அரும்பிய ஆரூடம்

முடிவு ஆரம்பம், ஆரம்பம் முடிவு. ஆக்கம் அழிவு, அழிவு ஆக்கம். இரவு பகல், பகல் இரவு. ஒன்றின் எல்லையைத் தொட்டவாறு அதன் எதிர்மறையின் எல்லை. இந்த எல்லைகளின் விரிவும் சுருக்கமும் ஒரு உயிரினது சூழ்நிலையினது, மொத்தத்தில் உலகினது போக்கையே நிர்ணயிக்கின்றது. ஒவ்வொன்றின் முடிவும் தோற்றமும் வித்தியாசமானவை. அதேபோல் ஒன்றின் ஆக்கம் மற்றதின் ஆக்கத்தில் இருந்து வேறுபட்டது. அதேபோல் எல்லா இரவும் ஒரேமாதிரியானவையல்ல. பகலும் அவ்வாறே. அளவால் தன்மையால் வேறுபட்டவை. ஆனால் எல்லாம் ஆரம்பம்தான். முடிவுதான். ஆக்கம்தான் அழிவுதான். இரவுதான் பகல்தான்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

அதில் என்ன தவறு?!

வெள்ளைத்தோல்கள், பழுப்புத்தோல்கள், கறுப்புத்தோல்கள் எனப் பலதரப்பட்ட பன்னாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாகத் தாறுமாறாக- அவசர அவசரமாக வாகனங்களோடு வாகனங்களாக- இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அது பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம். 

முன்வாசலில் வலப்புறமாக நிரையாக டக்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இடத்துக்காக முன்நகர- அதை ஒட்டிய தொலைபேசிக் கூண்டுகளின் பக்கத்தில் நிரம்பி வழியும் சைக்கிள்கள்.

பியர் ரின்களுடன் தள்ளாடிவந்த இரண்டு செம்பட்டைப் பரட்டைத் தலைகள் முரட்டுச் சப்பாத்துக் கால்களால் முன்னால் நின்ற சைக்கிள்களில் ஒன்றை உதைத்து நெளித்து, தமது போதைக்குக் குறியீடு வைத்து நகர, சைக்கிள் உரிமையாளரின் வருகைக்காக அனாதையாய்க் கிடந்தது.